செய்திகள்
அடர்ந்த வனப்பகுதி மண்பாதையில் கர்ப்பிணி பெண் குமாரியை சுமந்து வந்த ஊர் மக்கள்.

ரோடு கிடையாது.. பஸ் வசதி கிடையாது.. 10 மாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி சுமந்து வந்த மக்கள்

Published On 2019-12-04 10:33 IST   |   Update On 2019-12-04 10:33:00 IST
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதி அருகே உள்ள கிராமத்தில் ரோடு மற்றும் பஸ் வசதி இல்லாததால் 10 மாத கர்ப்பிணியை தொட்டில் கட்டி கிராம மக்கள் சுமந்து வந்தனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம், அந்தியூர் வனப்பகுதியை அடுத்துள்ளது பர்கூர் வனப்பகுதி. இப்பகுதியில் உள்ள வனக்கிராமமம் கண்டப்பூர்.

இந்த ஊரில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

இந்த ஊரில் சாலை கிடையாது மண்பாதை மட்டுமே உள்ளது. அதுவும் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் அங்கு பஸ் வசதியும் கிடையாது. கண்டப்பூரில் இருந்து மெயின் ரோட்டோரம் உள்ள தாமரைகரை என்ற ஊருக்கு 10 கிலோ மீட்டர் தூரம் வர வேண்டும். இதனால் இப்பகுதி மக்கள் தங்களுக்கு தார் ரோடு, பஸ் வசதி கேட்டு பல முறை மனு கொடுத்து விட்டனர்.

இந்த நிலையில் மண்பாதை தார்சாலையாக போட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இன்னும் பணிகள் தொடங்கவில்லை.

இதனால் கண்டப்பூர் ஊர் மக்கள் மாட்டு வண்டியிலும் இரு சக்கர வாகனத்திலும் தான் இதுவரை வந்து செல்கிறார்கள்.

இந்த ஊரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மனைவி குமாரி. இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு மகன் உள்ளான்.

இந்த நிலையில் குமாரி மீண்டும் கர்ப்பம் ஆனார். 10 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு துடித்தார். உடனடியாக அவரது கணவரும் உறவினர்களும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

தற்போது அங்கு மழை பெய்து வருவதால் வனப்பகுதியில் பல இடங்களில் தண்ணீர் ஓடியது. இதனால் 108 ஆம்புலன்சால் செல்ல முடியவில்லை.

இதனால் என்ன செய்வது என தவித்த மாதேஷ் பிறகு ஒரு மூங்கில் மூலம் சேலைகளால் தொட்டில் கட்டி அதில் குமாரியை தூக்கி வைத்து அடர்ந்த காட்டு வழியாக கடந்து வந்தனர்.

10 கிலோ மீட்டர் தூரம் கடக்க வேண்டும். வேறு வழியில்லை போய்தான் ஆகவேண்டும். தொடர்ந்து காட்டுப்பாதையில் நடந்தனர்.

6 கிலோ மீட்டர் தூரம் கடந்த பிறகு அந்த வழியாக ஒரு மினி லாரி வந்தது. நிறைமாத கர்ப்பிணி பெண் மீது பரிதாபப்பட்ட லாரி டிரைவர் லாரியை நிறுத்தி கர்ப்பிணி பெண்ணையும் அவரது ஊர்மக்களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார்.

மலைப்பாதை மிகவும் மோசமாக இருந்ததால் லாரியால் விரைவாக செல்ல முடியவில்லை.

தாமரைக்கரை அரசு ஆரம்பசுகாதார நிலையம் பக்கத்தில் வந்த போது குமாரிக்கு மேலும் வலி ஏற்பட்டு துடித்தார்.

உடனடியாக லாரியை ஓரமாக நிறுத்தினார்கள். அந்த லாரியில் வந்த ஊர்பெண் ஒருவர் பிரசவம் பார்த்தார்.

சிறிது நேரத்தில் அந்த காட்டுக்குள் குழந்தையின் அழுகுரல் ஒலித்தது. குமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

பிறகு அந்த லாரியிலேயே தாயையும் சேயையும் ஏற்றிக் கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

அங்கு தாயும் சேயும் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த கண்டப்பூர் வனமக்கள் ஒரு லாரியில் புறப்பட்டு தாமரைக்கரை வந்து குமாரியை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.

அப்பகுதி மக்கள் கூறும் போது ‘‘எங்கள் நிலைமையை பார்த்த பிறகு இனியாவது தார் ரோடு போட்டு பஸ் வசதி செய்து கொடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News