செய்திகள்
ஜான் பாண்டியன்

த.ம.மு.க. உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது- ஜான்பாண்டியன்

Published On 2019-10-24 08:35 GMT   |   Update On 2019-10-24 08:35 GMT
தமிழகத்தில் இனி த.ம.மு.க. உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடந்தது.

கட்சியின் நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் த.ம.மு.க சார்பில் உறுப்பினர் சேர்க்கை தீவிரப்படுத்தி அதில் வெற்றி கண்டுள்ளோம். தமிழகத்தில் இனி தமமுக உதவி இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இடைத்தேர்தல் வெற்றி ஒட்டுமொத்த தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்துக்கு கிடைத்த வெற்றி. இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனதில் வைத்து தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை மத்திய அரசு பிறப்பிக்க உதவி செய்ய வேண்டும்

பஞ்சமி நிலம் என்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உருவாக்கப்பட்ட இடம். அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்தாலும் கண்டிக்கத்தக்கது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பண்ணன் போராட்டங்களை நடத்தினார். நானும் பல்வேறு போராட்டம் நடத்தி உள்ளேன். எனவே ஆதிதிராவிட நலத்துறை பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும். டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் நோயை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு ரோடுகளை சென்று பார்த்தேன். ரோடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்த ரோட்டில் ஏர் உழுது நாற்று நடலாம் போல் உள்ளது. உடனடியாக தமிழ் அரசு போர்க்கால அடிப்படையில் ரோடுகளை சீரமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News