செய்திகள்
கொலை

காரைக்குடியில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் கழுத்தை அறுத்துக் கொலை

Published On 2019-09-29 18:48 IST   |   Update On 2019-09-29 18:48:00 IST
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் வீட்டின் மொட்டை மாடியில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

காரைக்குடி:

காரைக்குடி தந்தை பெரியார் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது 51). இவரது மனைவி பூமதி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

மணிமுத்து, கத்தார் நாட்டில் வெல்டராக பணியாற்றி வந்தார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வெளி நாட்டில் இருந்து மணிமுத்து ஊர் திரும்பினார்.

நேற்று இரவு அவர் குடும்பத்தினருடன் வீட்டில் இருந்தார். நள்ளிரவில் புழுக்கமாக இருந்ததால், மணிமுத்து மொட்டை மாடிக்கு சென்று படுத்துள்ளார்.

இன்று காலை கணவருக்கு காபி கொடுப்பதற்காக பூமதி மொட்டை மாடிக்குச் சென்றார். அங்கு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மணி முத்து பிணமாக கிடந்தார். இதனைக்கண்டு பூமதி அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. துணை சூப்பிரண்டு அருண் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

மணிமுத்து உடல் பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வீட்டின் மொட்டை மாடியில் படுத்திருந்தவர் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலையாளிகள் யார்? என்பது மர்மமாக உள்ளது.

காரைக்குடி வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News