செய்திகள்
கொலை செய்யப்பட்ட விஜயகுமார்.

மனைவிக்கு செக்ஸ் தொல்லை- லாரி டிரைவரை அடித்து கொன்ற கணவர்

Published On 2019-09-22 10:25 GMT   |   Update On 2019-09-22 10:25 GMT
கோபி அருகே மனைவியிடம் தகாத முறையில் நடந்து கொண்ட லாரி டிரைவரை இரும்பு கம்பியால் தாக்கி வாயில் வி‌ஷத்தை ஊற்றி கொன்ற கணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

கோபி:

ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த அவ்வையார் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 37). ரிக்வண்டி லாரி டிரைவர் அதே ஊரை சேர்ந்தவர் மணிமோகன். விவசாயி.

சம்பவத்தன்று இரவு மணிமோகனும் அவரது மனைவி செல்வியும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து விஜயகுமார் மணிமோகனின் மனைவியை தட்டி எழுப்பி தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வி சத்தம் போட்டார். உடனே சுதாரித்த விஜயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிமோகனும் அவரது நண்பர்களும் விஜயகுமாரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் அவ்வையார் பாளையம் பக்கம் வந்தார். இதை கண்ட மணிமோகன் மற்றும் 3 பேரும் சேர்ந்து விஜயகுமாரை பிடிக்க விரட்டினர். இதை கண்டு அவரும் ஓட்டம் பிடித்தார்.

சின்னகுளம்பிரிவு மாரியம்மன் கோவில் அருகே விஜயகுமாரை மணிமோகன் உள்பட 4 பேரும் சேர்ந்து பிடித்து சரமாரியாக தாக்கினர். இரும்பு கம்பி மற்றும் பிளாஸ்டிக் தடியால் அடித்தனர்.

இதில் நிலை குலைந்து கீழே விழுந்த விஜயகுமார் வாயில் அவர்கள் வி‌ஷத்தை ஊற்றினர். அத்துடன் விடாமல் மேலும் விஜயகுமார் வந்த மோட்டார் சைக்கிளால் அவரது கழுத்தில் ஏற்றினர். இதில் சிறிது நேரத்தில் விஜயகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பிறகு அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் விஜயகுமார் இறந்து கிடந்த இடத்தை கண்டு கோபி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இறந்து கிடந்த விஜயகுமார் உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த கொடூர கொலையில் தலைமறைவாக உள்ள மணிமோகன் மற்றும் சதிஸ்குமார் பூபதிராஜா, நாகராஜ்ஆகிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News