செய்திகள்
குணசேகரன்

புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை- போலீசார் விசாரணை

Published On 2019-09-09 16:30 GMT   |   Update On 2019-09-09 16:30 GMT
புவனகிரி அருகே நாளைமறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புவனகிரி:

புவனகிரி அருகே நாளைமறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள மருதூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் பாரி. இவரது மகன் குணசேகரன்(வயது 30), தொழிலாளி. இவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். அதற்காக அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து நிச்சயதார்த்தமும் நடந்தது.

குணசேகரனுக்கும், அந்த பெண்ணுக்கும் நாளைமறுநாள் (புதன்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக இருவீட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குணசேகரன், தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த மருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட குணசேகரன் உடலை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து பாரி, மருதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாளைமறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் குணசேகரன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News