செய்திகள்
கொலை செய்யப்பட்ட தினேஷ்.

சிதம்பரம் அருகே வாலிபர் குத்திக்கொலை: அண்ணன்- தம்பி வெறிச்செயல்

Published On 2019-08-29 11:09 IST   |   Update On 2019-08-29 11:09:00 IST
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் விழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தலைமறைவான அண்ணன், தம்பிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை கடைவீதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தினேஷ் (வயது 21).

இவர் இரவு அங்கு நடந்த மாரியம்மன் கோவில் விழாவில் காளியாட்டத்தை பார்க்க சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோரும் அங்கு வந்தனர். இவர்களுக்கிடையே கோவில் விழாவில் பிளக்ஸ் பேனர் வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் அது மோதலாக வெடித்தது. இதனை பார்த்த அங்குள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்தனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பின்னர் இரவு 11 மணியளவில் கிள்ளை பகுதியில் தினேஷ் தனது நண்பர்களுடன் அமர்ந்து பேசி கொண்டிருந்தார்.

அப்போது தாமரைச் செல்வனும், தமிழ்ச்செல்வனும் அங்கு வந்தனர். அவர்களுக்குள் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த தாமரைச்செல்வன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் சேர்ந்து தினேசை கத்தியால் சரமாரியாக கத்தியால் குத்தினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் தினேஷ் கீழே சாய்ந்தார். இதனை பார்த்ததும் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கத்திக்குத்து காயத்துடன் துடித்து கொண்டிருந்த தினேசை அவரது நண்பர்கள் மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் இறந்தார்.

இது குறித்து கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வன், தாமரைச்செல்வன் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் கிள்ளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News