செய்திகள்
வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்ந்தது

Published On 2019-08-24 04:14 GMT   |   Update On 2019-08-24 04:14 GMT
கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று 40.6 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலையில் 41.43 அடியாக உயர்ந்தது.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.

இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களுக்கு தாகத்தை தீர்ப்பதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பலத்த மழை பெய்ததால் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தது.

கடந்த 17-ந் தேதி பாசனத்துக்காக கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்தது. அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு சுமார் 1,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த நீர் நேற்று முன்தினம் வீராணம் ஏரிக்கு வந்தது. அதனை தொடர்ந்து நேற்று ஏரியின் நீர்மட்டம் 40.6 அடியாக உயர்ந்தது. இன்று காலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் 41.43 அடியாக உயர்ந்தது.

கீழணையிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வருவதால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சென்னை மக்களின் குடிநீருக்காக 24 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது. இன்று 25 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News