செய்திகள்
கொலை செய்யப்பட்ட தேவி- கைதான கள்ளக்காதலன் ராமகிருஷ்ணன்.

7,500 ரூபாய்க்காக 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலன்

Published On 2019-07-23 05:03 GMT   |   Update On 2019-07-23 05:03 GMT
சத்தியமங்கலம் அருகே பணத்தகராறில் 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (வயது 55). இவரது கணவர் பெயர் சுரேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் லாரி கிளினராக உள்ளார்.

அடிக்கடி வேலைக்கு லாரியில் வெளியூர் மற்றும் வெளி மாநிலத்துக்குப் போய் விடுவார்.

இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வீட்டில் தேவி கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை பற்றி சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தேவி பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில் ஒன்று கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் தான் இந்த கொலை ஏற்பட்டிருக்க கூடும் என தெரிந்தது.

அதன்படி தேவியை கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் தான் என தெரிய வந்தது. தேவியின் கணவர் அடிக்கடி வேலைக்காக லாரியில் வெளியூர் சென்று விடுவதால் தேவிக்கும் கடம்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 30) என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

தேவி கரும்பு வெட்டும் வேலைக்கு போய் வந்தார். அப்போது அவருடன் வாலிபர் ராமகிருஷ்ணனும் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். அப்போது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பிறகு அதுவே கள்ளக்காதலாக மாறியது. தேவியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராமகிருஷ்ணன் சென்று தேவியுடன் உல்லாசம் அனுபவித்து வந்தார். அப்போது இருவரும் மது குடித்து ஜாலியாக இருந்து உள்ளனர்.

இந்த நிலையில் தனது கள்ளக்காதலனிடம் தேவி ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கேட்ட போது “என்ன அவசரம் பிறகு தருகிறேன்” என்று கூறினாராம்.

சம்பவத்தன்று மது குடித்த நிலையில் தேவியுடன் ராமகிருஷ்ணன் உல்லாசம் அனுபவித்தார். அப்போது தேவியிடம் தான் கொடுத்த பணம் ரூ.7,500 கேட்டு உள்ளார். இதற்கு தேவி பணம் என்னிடம் இல்லை என்று கூற இது தொடர்பாக அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு முற்றியது.

இதில் ஏற்பட்ட ஆத்திரத்தில் ராமகிருஷ்ணன் அரிவாளால் தேவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மேற்கண்ட பரபரப்பு தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. தலைமறைவாக சுற்றி திரிந்த கொலையாளி ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பிறகு அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோபியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News