செய்திகள்
பெண் மீது தாக்குதல்

காதலி என நினைத்து இளம்பெண் கன்னத்தில் ‘பளார்’ அறை விட்ட வாலிபர் கைது

Published On 2019-07-20 10:50 IST   |   Update On 2019-07-20 10:50:00 IST
கவுந்தப்பாடி அடுத்துள்ள செந்தாம்பாளையத்தில் தனது காதலி என நினைத்து வேறொறு பெண்ணை கன்னத்தில் அறைந்தவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கவுந்தப்பாடி:

கவுந்தப்பாடி அருகே உள்ள செந்தாம்பாளையத்தை சேர்ந்த ஒரு இளம்பெண் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு தோட்டத்து பாதையில் கவுந்தப்பாடியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் பைக்கில் வந்த வாலிபர் அந்த பெண்ணை தாக்கி கீழே தள்ளி கன்னத்தில் பளார் பளார் என அறைந்தார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே வாலிபர் பைக்கை எடுத்து கொண்டு தப்பி ஓடினார். இந்த சம்பவம் குறித்து கவுந்தப்பாடி போலீஸ் நிலையத்தில் அந்த பெண்ணின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை தாக்கிய வாலிபரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் பெண்ணை தாக்கிய ஆப்பக்கூடல் கூத்தம் பூண்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் வல்லரசு (20) என்ற வாலிபரை கைது செய்தனர். இவர் ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருகிறார்.

வல்லரசு ஒரு பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். தனது காதலி என நினைத்து அந்த பெண்ணின் கன்னத்தில் அறைந்தார். கீழே தள்ளி கன்னத்தில் அறைந்த பெண் வேறு பெண் என்பதை அறிந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

மேலும் போலீசார் விசாரணையில் ஒருதலையாக ஒருபெண்ணை காதலித்து வந்தார். அவர் ஊர் பெயர் தெரியாது. அந்த பெண் என நினைத்து இந்த பெண்ணை கன்னத்தில் அறைந்து விட்டேன் என தெரிவித்தார்.

வல்லரசு மீது கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கோபி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News