செய்திகள்
ரெயிலில் தண்ணீர் நிரப்பப்படும் காட்சி.

சென்னைக்கு குடிநீர் - ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு ரெயில் நாளை வருகிறது

Published On 2019-07-16 07:39 GMT   |   Update On 2019-07-16 07:39 GMT
சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக மேலும் ஒரு ரெயில் நாளை ஜோலார்பேட்டைக்கு வருகிறது.
ஜோலார்பேட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கடந்த மாதம் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார். ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி ஜோலார் பேட்டையில் தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளும், மெட்ரோ குடிநீர் அதிகாரிகளும் இரவு பகலாக பணிகளை மேற்கொண்டனர். கடந்த 12-ந் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்றது. அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒரு ரெயில் மூலம் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் சென்னை நகர மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 4-வது நாளான நேற்று மதியம் 1.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலைய 5-வது யார்டுக்கு சிறப்பு ரெயில் வந்தடைந்தது. 5-வது யார்டில் ரெயிலுக்கு செல்லும் உயர் மின்னழுத்த மின்சாரத்தை ஊழியர்கள் துண்டித்தனர்.

இதையடுத்து 100க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் ரெயிலில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3.30 மணி நேரம் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன்பிறகு ரெயில்வே ஊழியர்கள் ஒவ்வொரு வேகனிலும் 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உள்ளதை உறுதி செய்தனர். அதைத் தொடர்ந்து அந்த ரெயில் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டது. இன்று காலை ரெயில் மீண்டும் வந்ததும் அதில் தண்ணீர் நிரப்பும் பணி நடந்தது.

இந்நிலையில் மேலும் ஒரு ரெயிலில் குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு ரெயில் 50 வேகன்களுடன் புறப்பட்டு நாளை ஜோலார்பேட்டை வந்தடைகிறது. 18-ந் தேதி முதல் அதையும் சேர்த்து 2 ரெயில்களில் சென்னை மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்.

ரெயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News