ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 வாலிபர்கள் கைது
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று காலை கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சிக்னல் அருகே 7 வாலிபர்கள் கருப்பு சட்டை அணிந்து கொண்டு சாலையில் அமர்ந்து திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹைட்ரோகார்பன் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்ற வாசகம் அடங்கிய அட்டையை கையில் வைத்துக் கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தனர்.
இந்த தகவல் அறிந்த திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரய்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர்களிடம் யார் இந்த போராட்டத்திற்கு அனுமதி கொடுத்தார்கள்? எந்த அடிப்படையில் இந்த போராட்டம் நடத்துகிறீர்கள் என கேட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபரிடம் கலைந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்தனர். ஆனால் வாலிபர்கள் தங்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் ஜீப்பில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.