செய்திகள்
கொள்ளைநடந்த வீடு.

பண்ருட்டியில் உருட்டுக் கட்டையால் தாக்கி மூதாட்டியிடம் நகை கொள்ளை

Published On 2019-06-05 14:53 IST   |   Update On 2019-06-05 14:53:00 IST
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை உருட்டுக் கட்டையால் தாக்கி மூதாட்டியிடம் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பண்ருட்டி:

புதுவை மாநிலம் நல்லாத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரசு(வயது70). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் பண்ருட்டி இந்திரா காந்தி சாலை அருகில் உள்ள ஒரு வீட்டை வாடகை எடுத்து அந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

அந்த வீட்டின் முன்பு இட்லி கடையும் நடத்தி வந்தார். நேற்று இரவு சரசு வீட்டில் தூங்கினார். இன்று அதிகாலை சரசு வழக்கம் போல் எழுந்து வீட்டின் முன்பக்க வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றான். உடனே சரசு திருடன்...திருடன்...என்று அலறினார்.

இதனால் கோபம் அடைந்த மர்ம மனிதன் அங்கு கிடந்த உருட்டு கட்டையை எடுத்து சரசுவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் சரசுவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சரசு ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். உடனே அந்த மர்ம மனிதன் சரசுவின் கழுத்தில் கிடந்த ½ பவுன் தங்க சங்கிலி மற்றும் காதில் கிடந்த ½ பவுன் கம்மல் ஆகியவற்றை கொள்ளையடித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.

இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சரசு, ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன், இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மூதாட்டியை தாக்கி விட்டு நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News