செய்திகள்

சென்னையில் 50 சொகுசு ஏ.சி. பஸ்கள் விரைவில் இயக்க திட்டம்

Published On 2019-05-27 09:17 GMT   |   Update On 2019-05-27 09:17 GMT
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு மற்றும் பயணிகளின் எதிர்பார்ப்பையொட்டி 50 சொகுசு ஏ.சி.பஸ்கள் விரைவில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை மாநகர போக்கு வரத்து கழகம் சார்பில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏ.சி. சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டன.

ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஏ.சி. பஸ்களை அதிகம் பயன்படுத்தி வந்தனர். இதனால் அடையாறு, திருவான்மியூர், சோழிங்கநல்லூர், தரமணி பகுதிகளை மையமாக வைத்து ஏ.சி. பஸ்கள் இயக்கப்பட்டன.

கட்டணம் அதிகமாக இருந்ததால் சாதாரண மக்கள் அதில் பயணம் செய்ய தயங்கினார்கள். சென்னை மாநகரில் வால்வோ ஏசி பஸ்கள் இயக்கப்பட்ட போதிலும் அதனை முறையாக பராமரிக்காததால் தொடர்ந்து இயக்க முடியவில்லை. 5 வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு பின்னர் ஓரம் கட்டப்பட்டன. அதன் பிறகு ஏ.சி பஸ்கள் மாநகரத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தன.

இந்த நிலையில் சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஏ.சி. பஸ் பயணத்தை மக்கள் விரும்புகின்றனர். அலுவலகங்களில் பணிபுரிந்து களைப்புடன் வீடு திரும்பும் போது ஏ.சி. பஸ்சில் எவ்வித சோர்வும் இல்லாமல் பயணம் செய்ய விரும்புவதால் அதன் தேவை அதிகரித்துள்ளது. பயணிகளின் எதிர்பார்ப்பும் தேவையும் வெயிலின் தாக்கத்தால் அதிகரித்துள்ள நிலையில் இதனை கருத்தில் கொண்டு 50 ஏ.சி.சொகுசு பஸ்களை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு அரசு ஒதுக்கி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறுகையில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஏ.சி.பஸ்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபற்றி அரசுக்கு தெரிவித்தோம். அதனை பரிசீலித்து 50 ஏசி பஸ்களை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான பணி வேகமாக நடந்துவருகிறது. விரைவில் புதிய பஸ் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
Tags:    

Similar News