செய்திகள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு ஆதரவாக தமிழிசை பிரசாரம்

Published On 2019-05-07 14:42 IST   |   Update On 2019-05-07 14:42:00 IST
தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நாளை முதல் 3 நாட்கள் வாரணாசி தொகுதியில் தமிழர்கள் பகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார். #Loksabhaelections2019 #BJP #Tamilisaisoundararajan
சென்னை:

தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் முடிந்துவிட்டதால் தமிழக பா.ஜனதா தலைவர்கள் வட மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் மத்தியில் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் மத்திய மந்திரி டாக்டர் ஹர்‌ஷவர்தனுக்கு ஆதரவாக டிரைநகர், ‌ஷக்குர்பஸ்டி, வாசிர்புர் சட்டமன்ற தொகுதிகளில் தமிழர்கள் பெரும்பாலானோர் வாழும் இடங்களில் சென்று பிரசாரம் செய்தார். அவருடன் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

செகாபுரம் மாரியம்மன் கோவில் பகுதிகளில் பிரசாரத்துக்கு சென்ற தமிழக நிர்வாகிகளை பார்த்ததும் அங்குள்ள தமிழர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அவர்களிடம், மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைய தாமரைக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு பொதுமக்களும் உறுதியளித்தனர்.

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய தென் மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் வந்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு டாக்டர் ஹர்‌ஷவர்தன் நன்றி தெரிவித்தார். அதேபோல் புதுடெல்லியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் மீனாட்சிலேகிக்கும் ஆதரவாக பிரசாரம் செய்தார்கள்.

நாளை முதல் 3 நாட்கள் வாரணாசி தொகுதியில் தமிழர்கள் பகுதியில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக டாக்டர் தமிழிசை பிரசாரம் செய்கிறார்.

பின்னர் சென்னை திரும்பி வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார். #Loksabhaelections2019 #BJP #Tamilisaisoundararajan

Similar News