செய்திகள்

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம்- திருநங்கைகள் ஒப்பாரிவைத்து அழுதனர்

Published On 2019-04-17 11:03 GMT   |   Update On 2019-04-17 11:03 GMT
உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கூத்தாண்டவர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுதனர். #koovagamkoothandavar

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த 2-ந் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) திருநங்கைகள் தாலி கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், மும்பை, கல்கத்தா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

திருநங்கைகள் புதுப்பெண்கள் போல அலங்கரித்து, பின்னர் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை பெருமைகளை குறித்து இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். தேரோட்டம் நடைபெற்றது

நிகழ்ச்சியைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை)காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக 11 மணியளவில் பந்தலடி வந்தது. பின்னர் அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி அறுத்து எறிந்தனர். பூக்களைப் பிய்த்து வீசி, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்தனர். ஓப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர். #koovagamkoothandavar

Tags:    

Similar News