செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணனின் காரை பறக்கும் படையினர் நிறுத்தி சோதனை செய்தனர்.

பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் காரில் சோதனை

Published On 2019-04-05 10:02 GMT   |   Update On 2019-04-05 10:02 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பயணம் செய்த காரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தனர். #Loksabhaelections2019
பண்ருட்டி:

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்கும் பொருட்டு தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

கடலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பண்ருட்டியில் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கட்சி நிர்வாகிகளுடன் காரில் கடாம்புலியூர் வழியாக பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் பால கிருஷ்ணனின் காரை தடுத்து நிறுத்தினர்.

பின்னர் அவரது காரில் சோதனை நடத்தினர். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகளின் கார்களையும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அந்த காரில் எந்தவித பொருளும் கிடைக்கவில்லை. அதன் பிறகு பாலகிருஷ்ணன் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த வாகன சோதனையால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதன் பின்னர் பண்ருட்டியில் நடந்த தி.மு.க தேர்தல் பிரசார கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பால கிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பணம் எடுத்து செல்லும் வண்டிக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர். தேவையில்லாமல் பொது மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் வாகன சோதனை என்ற பெயரில் தொல்லை கொடுக்கின்றனர் என்று குறிப்பிட்டார். #Loksabhaelections2019
Tags:    

Similar News