செய்திகள்
நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

அதிமுக ஆட்சியை கவிழ்த்து விட்டு ஸ்டாலின் முதல்வராக நினைக்கிறார்- எடப்பாடி பழனிசாமி

Published On 2019-04-03 10:19 IST   |   Update On 2019-04-03 10:19:00 IST
அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என ஸ்டாலின் நினைப்பதாக எடப்பாடி பழனிசாமி பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #MKStalin
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார்.

அவரை ஆதரித்து ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, ராமநாதபுரம் அரண்மனை பகுதி பரமக்குடி பகுதிகளில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவின் பிரச்சனைகளை சரி செய்து உலகமே நமது நாட்டை திரும்பிப் பார்க்க செய்தவர் பிரதமர் மோடி. அன்னிய சக்திகள் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்தவர்.

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கடந்த 2 ஆண்டுகளில் தமிழக அரசை ராஜினாமா செய்ய வலியுறுத்தி 35 ஆயிரம் போராட்டங்கள் நடத்தியுள்ளார். தமிழகத்தில் எந்த நலத்திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க விடாமல் செய்ய மு.க. ஸ்டாலின் தேவையற்ற போராட்டங்களை நடத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

மத்தியில் நிலையான ஆட்சி அமைய பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். நாடு நலம் பெறவும், வளம் பெறவும் மத்தியிலும், மாநிலத்திலும் ஒருமித்த கருத்துடைய ஆட்சி அமைய வேண்டும். அப்போதுதான் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள மெகா கூட்டணியால் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உள்ளார். அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மத்திய அரசு உதவியுடன் காவிரி, கோதாவரி ஆறுகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும்.

தற்போது தமிழகம் மின் தடையே இல்லாத மாநிலமாக விளங்குகிறது. சட்டம்-ஒழுங்கில் இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. ஜெயலலிதா கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றி உள்ளது. ஸ்டாலின் இன்னும் எத்தனை போராட்டங்கள் நடத்தினாலும் அனைத்தையும் முறியடிக்க கூடிய சக்தி எங்களுக்கு உண்டு.

மு.க.ஸ்டாலின் நான் முதல்வரானதில் இருந்து எப்போது பேசினாலும் என்னை பதவி விலகச் சொல்கிறார். அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்த்துவிட்டு முதல்வர் நாற்காலியில் அமர்ந்து விடலாம் என நினைக்கிறார். அ.தி. மு.க.வுக்கு மக்கள் ஆதரவு இருக்கும் வரை அவர் முதல்வராக முடியாது.

மேற்கண்டவாறு அவர் பேசினார். #Loksabhaelections2019 #EdappadiPalaniswami #MKStalin

Similar News