செய்திகள்

விஜயகாந்த் விரைவில் பிரசாரத்துக்கு வருவார்- பிரேமலதா

Published On 2019-04-03 10:10 IST   |   Update On 2019-04-03 10:10:00 IST
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார் என்று பிரேமலதா தெரிவித்தார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha
ஸ்ரீமுஷ்ணம்:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறார். பண்ருட்டி, கடலூர் உழவர்சந்தை, விருத்தாசலம் பாலகரை ஆகிய இடங்களில் கடலூர் பாராளுமன்றதொகுதி பா.ம.க. வேட்பாளரை ஆதரித்தும், ஸ்ரீமுஷ்ணம், புவனகிரி ஆகிய இடங்களில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்தும் திறந்தவேனில் நின்றபடி பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார்.

ஸ்ரீமுஷ்ணம் காமராஜ் சிலை அருகே உள்ள கடை வீதியில் நேற்று இரவு பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி மெகா கூட்டணி. இந்த கூட்டணி புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும். நமது வேட்பாளர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக டெல்லிக்கு சென்று தமிழகத்தில் உள்ள மக்களுக்கு வேண்டிய வாழ்வாதார பிரச்சனைபற்றி பேசி திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என்றால் இந்திய பிரதமராக மீண்டும் மோடி வரவேண்டும். நமது கூட்டணி தமிழகம் வரவேற்கும் கூட்டணி. ஒட்டுமொத்த இளைஞர்கள், பெண்கள் ஆதரவுடன் அமோக வரவேற்பு பெற்ற கூட்டணி.

இந்த கூட்டணி அமையக்கூடாது என தி.மு.க. எத்தனையோ சூழ்ச்சிகள் செய்தது. அவற்றை எல்லாம் முறியடித்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், கேப்டன் ஆகியோர் சேர்ந்து இந்த கூட்டணி அமைத்துள்ளனர். இந்த கூட்டணி இயற்கையாக பூ, இலை, பழம் என அமைந்துள்ள கூட்டணி. இங்குநிற்கும் இந்த கூட்டத்தை பார்க்கும்போது, ஆற்றல்மிகு இளைஞர்களின் கூட்டமாக உள்ளது.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வை சேர்க்க பலமுறை முயற்சி செய்தனர். ஆனால் அதற்கு கேப்டன் விஜயகாந்த் மறுத்துவிட்டு தற்போது வலுவான கூட்டணியில் சேர்ந்துள்ளார். தேனீக்கள் போல் தே.மு.தி.க. கட்சியின் பொறுப்பாளர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணக்கமாக செயல்பட்டு வாக்குகளை சிதறாமல் வாக்குச்சாவடிகளில் சேர்க்க வேண்டும்.

பொதுமக்களின் ஆசீர்வாதத்தால் விஜயகாந்த் தற்போது நல்ல உடல்நலத்துடன் நன்றாக இருக்கிறார். மேலும் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், பொதுமக்களின் நலன் குறித்தும் எங்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகிறார். நீங்கள் எதிர்பார்த்தபடி விஜயகாந்த் வெகுவிரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய வருவார். அவர் பிரசாரத்துக்கு வருகிற தேதியை கட்சி தலைமை விரைவில் அறிவிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார். #LokSabhaElections2019 #DMDK #Vijayakanth #Premalatha

Similar News