செய்திகள்

பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 3,700 போலீசார் தேவை- டி.ஜி.பி.க்கு மதுரை கலெக்டர் கடிதம்

Published On 2019-03-13 10:12 GMT   |   Update On 2019-03-13 10:12 GMT
சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளதால் கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று டி.ஜி.பி.க்கு மதுரை கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார். #LSPolls
மதுரை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் மதுரையில் காலை சித்திரை திருவிழா தேரோட்டமும், மாலை கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறுவதால் மதுரை பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தலை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்திலும் அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலை வேறு தேதிக்கு நடத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை நாளை நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மதுரை மாவட்ட கலெக்டர் நடராஜன், மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக டி.ஜி.பி.க்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், வழக்கமாக ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவின் போது 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா தேரோட்டத்தின் போது பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. எனவே கூடுதலாக 3,700 போலீசாரை பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. #LSPolls #MaduraiConstituency
Tags:    

Similar News