செய்திகள்

பெருந்துறை அருகே கார் டயர் வெடித்து லாரி மீது மோதியது- 6 பேர் படுகாயத்துடன் தப்பினர்

Published On 2019-03-02 10:24 IST   |   Update On 2019-03-02 10:24:00 IST
பெருந்துறை அருகே இன்று காலை கார் டயர் வெடித்து லாரி மீது மோதியது. இதில் 6 பேர் படுகாயத்துடன் உயிர் தப்பினார்கள்.

பெருந்துறை:

திருவண்ணாமலையை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கோவைக்கு ஒரு காரில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர்.

கோவையில் இஸ்லாமிய பேரவை கூட்டம் இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்ள அவர்கள் வந்தனர். காரை காதர்கான் (வயது28) என்பவர் ஓட்டி வந்தார்.

மேலும் காரில் பர்வேஸ்(48), ரிஜாயித் (35), சஜினா(28), சபானா(28), சபியா(2½) ஆகிய 6 பேர் வந்தனர்.

இந்த கார் இன்று காலை 6.30 மணியளவில் பெருந்துறை காஞ்சி கோவில் பைபாஸ் ரோட்டில் வந்த போது திடீரென காரின் ஒரு டயர் வெடித்தது. இதில் அந்த கார் நிலை தடுமாறி ரோட்டோரம் நின்ற ஒரு லாரி மீது மோதியது.

இதில் காரில் இருந்த 6 பேரும் படுகாயம் அடைந்தனர். கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாட்டுக்குள் சிக்கி தவித்தவர்களை மீட்டனர். மேலும் சம்பவ இடத்துக்கு பெருந்துறை போலீசாரும், விரைந்து வந்தனர்.

படுகாயத்துடன் துடித்த 6 பேரை மீட்டு பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News