செய்திகள்

மனைவி-மகளை கொன்றவர் சிறையில் அடைப்பு- ஜாமீனில் வந்த வியாபாரி தற்கொலை

Published On 2018-12-09 13:24 GMT   |   Update On 2018-12-09 13:24 GMT
தேனி அருகே மனைவி-மகள்களை கொன்ற வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

உத்தமபாளையம்:

தேனி அருகே சின்னமனூர் போலீஸ் சரகம் கோகிலாபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். பர்னிச்சர் விற்பனை செய்து வந்தார். அவரது மனைவி ஜமுனா (வயது 35). இவர்களுக்கு ஐஸ்வர்யா (17), அபிலாசா (11) ஆகிய மகள்கள் இருந்தனர்.

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த முருகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது 2 மகள்களையும் கழுத்தை நெறித்து கொன்றார். வேலைக்கு சென்று திரும்பிய மனைவி ஜமுனாவை கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர் முருகன் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றபோது அவரது தம்பி கண்ணன் காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அதன் பின்னர் முருகன் உயிர் பிழைத்தார். மனைவி, 2 மகள்களை கொன்ற குற்றத்துக்காக உத்தம பாளையம் போலீசார் முருகனை கைது செய்தனர்.

கைதான அவர் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். சின்னமனூரில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். நேற்று அறை கதவு நீண்ட நேரமாக திறக்கப்படவில்லை.

அதிர்ச்சியடைந்த விடுதி நிர்வாகத்தினர் சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறை கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு முருகன் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார்.

அருகில் மது, வி‌ஷ பாட்டில் இருந்தது. எனவே முருகன் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News