செய்திகள்
தேனீக்கள் கொட்டி பலியான தொழிலாளி கருப்புசாமி.

சென்னிமலை அருகே தேனீக்கள் கொட்டி தொழிலாளி பலி

Published On 2018-11-13 04:25 GMT   |   Update On 2018-11-13 04:25 GMT
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னிமலை:

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள மொரட்டுப்பாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கருப்புசாமி (வயது 58).

வீட்டில் கண் திருஷ்டிக்காக வைக்கப்படும் ஆகாச கிழங்குகளை இவர் சேகரித்து திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விற்பனை செய்து வந்தார்.

இவரும் மேலும் 2 பேரும் சேர்ந்து துலுக்கம்பாளையம் பகுதியில் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் தேனீக்கள் தேன் கூடு கட்டி இருந்ததை கண்டனர்.

இந்த கூட்டை அழித்து தேன் எடுக்க சுப்பிரமணியத்திடம் அனுமதி கேட்டு தேன் கூட்டை அழித்து தேன் சேகரித்து கொண்டிருந்தனர்.

தேனீக்களை விரட்டியடிக்கும் ஒருவித பொடியை தூவி தேன் எடுத்த போது கருப்புசாமியை தேனீக்கள் சூழ்ந்து சரமாரியாக கொட்டியது.

இதில் மயங்கி விழுந்த கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இவருக்கு குஞ்சாள் (55) என்ற மனைவியும், சுரேஷ் என்ற ஒரு மகனும், பூங்கொடி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

கருப்புசாமியின் உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News