செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம்- பெற்றோர் உள்பட 6 பேர் கைது
மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததாக பெற்றோர் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் குழந்தை திருமணத்தை தடுக்க கலெக்டர் அறிவுறுத்தலின் பேரில் அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் விழிப்புணர்வு பிரசாரமும் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் உள்ள திருமண மண்டபத்தில் 17 வயது மைனர் பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு சென்று மைனர் பெண்ணை மீட்டார். தொடர்ந்து அவர் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.
இதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் பெண்ணை திருமணம் செய்த கார்த்திக், அவரது தாயார் புஷ்பலதா, உறவினர் நவநீதகிருஷ்ணன், மைனர் பெண்ணின் பெற்றோர் முத்து புதியவன்-சுப்பு லட்சுமி, திருமண மண்டப உரிமையாளர் உத்திரபாண்டி ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.