செய்திகள்

கோவையில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கைதி தப்பி ஓட்டம்

Published On 2018-10-09 16:24 IST   |   Update On 2018-10-09 16:24:00 IST
கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைது கழிவறை ஜன்னலை உடைத்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை:

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகன் செல்வம் (வயது 30). இவரது மனைவி சிவகாமி. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

செல்வம் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜெயிலில் இருந்த இவர் கடந்த 6-ந் தேதி கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த சிறை அதிகாரிகள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் வார்டில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர்.

அங்கு இருந்த செல்வம் மீண்டும் கையை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார். இதனையடுத்து அவரை ஆஸ்பத்திரியில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு வைத்து அவருக்கு கடந்த 2 நாட்களாக டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த செல்வத்துக்கு பாதுகாப்பாக சரவணகுமார் என்ற போலீஸ்காரர் இருந்தார். இன்று அதிகாலை 5 மணியளவில் போலீஸ்காரரிடம் செல்வம் கழிவறைக்கு செல்வ வேண்டும் என்று கூறினார்.

இதனையடுத்து போலீஸ்காரர் சரவணகுமார் கழிவறை செல்ல செல்வத்தை அனுமதித்தார். செல்வம் கழிவறைக்கு சென்று 15 நிமிடங்கள் ஆகியும் அவர் திரும்பிவரவில்லை.

இதனால் போலீஸ்காரர் கழிவறை கதவை தட்டினார். ஆனால் கதவை செல்வம் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர் கதவை உடைத்து கழிவறைக்கு சென்று பார்த்தார்.

அப்போது கழிவறையில் செல்வம் இல்லை. கழிவறைக்கு சென்ற செல்வம் அங்கு இருந்த ஜன்னலை உடைத்து தப்பிச் சென்றது தெரிய வந்தது.

அதிர்ச்சியடைந்த போலீஸ்காரர் சரவணகுமார் இது குறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சிறை அதிகாரிகள் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சிறைக்கைதி செல்வத்தை தேடி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சிறைக்கைதி போலீஸ்காரரை ஏமாற்றி தப்பிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
Tags:    

Similar News