செய்திகள்

ஈரோட்டில் பட்டாசு விபத்து - 3 பேர் உயிரிழப்பு

Published On 2018-09-12 03:00 GMT   |   Update On 2018-09-12 06:38 GMT
ஈரோடு சாஸ்திரி நகரில் பட்டாசு பண்டல்களை வாகனங்களில் இருந்து இறக்கியபோது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 3 பேர் உயிரிழந்தனர். #FirecrackerExplosion
ஈரோடு:

ஈரோடு சாஸ்திரி நகர் வளையகார வீதியை சேர்ந்தவர் சுகுமார். இவரது மகன் கார்த்திக் (வயது 30).

இவர்களுக்கு சொந்தமான மளிகை கடை வளையகார வீதியில் உள்ளது. இந்த கடையை ஜாஸ்மின் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

கடையின் உரிமையாளர் சுகுமாரும் அவரது மகன் கார்த்திக்கும் தீபாவளியையொட்டி மளிகை கடை முன் கட்டில் போட்டு பட்டாசு விற்று வந்தார்கள்.

இந்தாண்டும் பட்டாசு வியாபாரம் செய்ய பட்டாசுகளை வரவழைத்தனர். இன்று காலை 6 மணியளவில் மினி லோடு ஆட்டோவில் 15 மூட்டைகள் தீபாவளி பட்டாசுகள் வந்து இறங்கியது. ஆட்டோவில் வந்தவரும் கார்த்திக்கும் பட்டாசுகளை கடைமுன் இறக்கி வைத்து கொண்டிருந்தனர். 13 மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டனர்.

மீதி உள்ள 2 மூட்டைகளை அவர்கள் இறக்கியபோது திடீரென பட்டாசுகள் வெடித்தது. மூட்டைக்குள் இருந்தது கல்வெடி என்று கூறப்படுகிறது.

இதனால் அது வெடித்த சத்தம் சுமார் 1 கி.மீட்டர் தூரத்துக்கு பயங்கரமாக கேட்டது. அந்த பகுதி வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த வெடி விபத்தில் கடை உரிமையாளர் கார்த்திக் மற்றும் பட்டாசுகளை இறக்கி வைத்த ஊழியர் ஆட்டோவில் இருந்த டிரைவர் ஆகிய 3 பேரும் உடல் சிதறி பலியானார்கள்.

அவர்களின் உடல் சிதறி 100 அடி தூரத்தில் போய் விழுந்தது. கார்த்திக்கை தவிர பலியான 2 பேரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.

இந்த வெடி விபத்தில் அப்பகுதியில் உள்ள 5 வீடுகளும் இடிந்து விழுந்தது. 6 மணி என்பதால் அனைவரும் எழுந்து வெளியே வந்துவிட்டனர். அதிகாலையில் சம்பவம் நடந்திருந்தால் மேலும் பலர் உயிரிழந்து இருக்க கூடும்.

மேலும் வெடி விபத்து அதிர்வால் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. வெடிவிபத்து நடந்தபோது நில அதிர்வு ஏற்பட்டது போல் இருந்தது. #FirecrackerExplosion
Tags:    

Similar News