செய்திகள்

கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு கூடுதல் பஸ் இயக்க கோரி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2018-09-07 18:04 IST   |   Update On 2018-09-07 23:26:00 IST
கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சரியான நேரத்தில் மாணவர்கள் சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், கடத்தூரில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. தருமபுரி மாவட்ட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தருமபுரி பஸ் நிலையம் வந்து அங்கிருந்து கல்லூரிக்கு மாணவர்கள் பேருந்தில் செல்ல வேண்டும். ஆனால் அந்த வழியாக செல்லும் பேருந்துகள் நகர பேருந்துகள் மட்டுமே நிறுத்தப்படுவதால் மாணவர்களால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாமல் அவதிபட்டு வருகின்றனர்.

அதனால் சரியான நேரத்தில் மாணவர்கள் கல்லூரிக்கு சென்று வர காலை, மாலை இரண்டு வேலையும் பேருந்துகள் இயக்கக்கோரி இன்று தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போக்குவரத்துத்துறை அதிகாரிகள், டவுன் போலீஸ் இன்ஸ் பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கல்லூரிக்கு பேருந்துகள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் கல்லூரி மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News