செய்திகள்

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும்- கடம்பூர் ராஜூ பேட்டி

Published On 2018-09-02 11:52 GMT   |   Update On 2018-09-02 11:52 GMT
திருப்பரங்குன்றம் மற்றும் திருவாரூர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றிபெறும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். #kadamburraju #admk

கோவில்பட்டி:

கோவில்பட்டி தலைமை தபால் நிலையத்தில் வங்கி சேவை தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த விழாவிற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கி வங்கி சேவையை தொடங்கி வைத்தார். விழாவில் கோவில்பட்டி நகரசபை ஆணையாளர் அச்சையா, நே‌ஷனல் பொறியியல் கல்லூரி இயக்குனர் சொக்கலிங்கம், தபால் துறை உதவி கண்காணிப்பாளர்கள் முருகன், வசந்தி சிந்துதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:

இந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதற்குள், மாமன்னர் பூலித்தேவன் நினைவு மாளிகையை புதுப்பிப்பதற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் விரைவில் நடைபெற இருக்கிறது. நடிகர் கமல்ஹாசன் அரசியலில் அனுபவமே இல்லாமல் பேசி வருகிறார்.

இதுவரை எந்த துறையிலாவது லஞ்சம், ஊழல் நடந்தது என்று அவரால் நிரூபிக்க முடிந்ததா? அவர் அரசியலுக்கு வர தயாராக இருந்தால், எந்த குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் கூற வேண்டும். ஆதாரம் இல்லாமல் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இதுவரை நடந்த 11 தேர்தல்களில் 9 முறை அ.தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. எனவே அங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறுவது உறுதி. திருவாரூர் தொகுதியில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி போட்டியிட்டதால் அக்கட்சி வெற்றி பெற முடிந்தது. இனி அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். #kadamburraju #admk

Tags:    

Similar News