செய்திகள்
விபத்தில் பலியான 1½ வயது குழந்தை லத்திகாவின் உடல்.

பண்ருட்டியில் கியாஸ் சிலிண்டர் லாரி மோதி 1½ வயது குழந்தை பலி

Published On 2018-08-10 05:04 GMT   |   Update On 2018-08-10 05:04 GMT
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இன்று காலை கியாஸ் சிலிண்டர் லாரி மோதிய விபத்தில் 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஆ.நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 35). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி (30). இவர்களுக்கு நிவாஷ் (3) என்ற ஆண் குழந்தையும், லத்திகா என்ற 1½ வயது பெண் குழந்தையும் உள்ளது.

இன்று காலை நிவாஷ் தனது தங்கை லத்திகாவை தூக்கி கொண்டு தெருவில் உள்ள மற்ற குழந்தைகளுடன் விளையாட சென்றான். குழந்தைகள் அனைவரும் தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் பண்ருட்டியில் உள்ள கியாஸ் ஏஜென்சிக்கு சொந்தமான மினி லாரி ஒன்று சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு அந்த வழியாக வந்தது.

அந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. உடனே அந்த குழந்தைகள் அங்கிருந்து சிதறி ஓடினர்.

இதில் 1½ வயது குழந்தையான லத்திகா மீது அந்த மினி லாரி மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லத்திகா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

லத்திகாவின் உடலை பார்த்து அவளது பெற்றோர் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

விபத்து குறித்து தகவல் அறிந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தை லத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மோதி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News