செய்திகள்

தவறு செய்த அதிகாரிகள் யாரும் தப்ப முடியாது- அமைச்சர் அன்பழகன்

Published On 2018-08-07 08:01 GMT   |   Update On 2018-08-07 08:01 GMT
அண்ணா பல்கலைக்கழகத்தில் மார்க் மதிப்பீட்டில் தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார். #KPAnbazhagan #RevaluationScam
சென்னை:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பரீட்சை பேப்பர் மறுமதிப்பீட்டில் மார்க் அதிகமாக வழங்கி பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அப்போதைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள்.

உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் இந்த ஊழல் தொடர்பாக நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக் கழகத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் ரூ.63 கோடி ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக புகார் கூறப்படுகிறது. பொதுவாக அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்வதாக இருந்தால் அதற்கு கொள்முதல் கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு ஒப்புதல் பெறவில்லை என்றால் அது தவறானதாகும்.

ஆனால் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை துணைவேந்தர் அல்லது கன்வீனர் கமிட்டிக்கு இதற்கான கட்டுப்பாட்டு அதிகாரம் உள்ளது. அந்த நேரத்தில் அங்கு துணைவேந்தர் இல்லை.

பேராசிரியர் உமா அப்போது தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இந்த நியமனம் நான் மந்திரியாவதற்கு முன்பு 2015-ம் ஆண்டு நடந்ததாகும்.

இந்த ஒப்பந்தம் செய்ததில் தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளோம். அந்த நேரத்தில் செயலாளர் பதவியில் இருந்தவர் யார்? என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்ய இருக்கிறோம். மார்க் மறுமதிப்பீட்டில் எப்படி தவறு நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டியது உள்ளது. ஒரு பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற தவறு நடந்ததால் மற்ற பல்கலைக்கழகத்திலும் இதே தவறு நடந்திருக்கும் என்று சொல்ல முடியாது. அங்கு தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வேறு நபராக இருப்பார். அவரும் இதை செய்திருப்பார் என்று சொல்ல முடியாது.

ஆனாலும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற தவறுகள் நடந்திருக்கிறதா? என்பதை அறிய நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். பல்கலைக்கழகத்தில் நடந்த தவறுகள் அமைச்சரவை அதிகாரிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அது பல்கலைக்கழக மட்டத்தில் நடந்துள்ளது. உயர்கல்வித்துறையில் ஏதேனும் அதிகாரிக்கு அதில் தொடர்பிருந்தால் அது தவறானதாகும். விசாரணையில் யார் தவறு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வி‌ஷயத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு எந்த பயமும் இல்லை. இதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். விசாரணையில் யார் தவறு செய்தாலும், எந்த துணைவேந்தர் காலத்தில் நடந்திருந்தாலும் நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். அவர்கள் முன்னாள் துணை வேந்தர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்.

ஏற்கனவே பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி மீது புகார் வந்ததை தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறு செய்த எந்த அதிகாரிகளும் தப்ப முடியாது.

இவ்வாறு அன்பழகன் கூறினார். #TNMinister #KPAnbazhagan #RevaluationScam
Tags:    

Similar News