செய்திகள்

வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் - அதிகாரிகளை மிரட்டியதாக மாமனார் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2018-08-04 11:28 IST   |   Update On 2018-08-04 11:28:00 IST
தேனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. #HomeBirth
மேலசொக்கநாதபுரம்:

தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டி தென்றல் நகரைச் சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 27). இவகள் ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவருக்கும் மகாலெட்சுமி (21) என்பவருக்கும் கடந்த 1 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. கண்ணன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்.

மகாலெட்சுமி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் இன்று காலை அவருக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்தது அக்கம் பக்கத்தில் இருந்தவர்ளுக்கு தெரிய வந்தது. நேற்று இரவு தனது மனைவிக்கு கண்ணன் பிரசவம் பார்த்து ஆண் குழந்தையை எடுத்ததாக அவர்களிடம் தெரிவித்துள்ளார்.

அந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியதால் அவரது வீட்டுக்கு போலீசாரும், அரசு மருத்துவர்களும் வந்தனர். வீட்டிலேயே பிரசவம் பார்த்தது குறித்து கண்ணனிடம் கேட்டபோது, இது எனது மனைவி மற்றும் என்னுடைய சம்மதத்தின் பேரிலேயே நடந்தது.

ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. என் குடும்பத்தில் பெரும்பாலானோர் வீட்டிலேயே பிறந்தவர்கள் தான். தற்போது வரை நாங்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறோம். ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பார்க்கும் பிரசவத்தில் கூட தவறு நடக்கலாம். ஆனால் எங்கள் வீட்டில் நடந்த எந்த பிரசவத்திலும் தவறு நடக்கவில்லை. யாரும் இறந்து போகவும் இல்லை. குழந்தை பெற்றெடுத்த பிறகு என் மனைவி எவ்வித சோர்வும் இல்லாமல் வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக செய்து வருகிறார். நான் அவருக்கு சிறிய உதவிகள் மட்டுமே செய்தேன் என்று தெரிவித்தார்.

கண்ணன் மற்றும் அவரது மனைவியிடம் டாக்டர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து ஊசி போட்டுக் கொள்ளுமாறு கூறினர். அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் குழந்தையின் தொப்புள் கொடியையும் அறுக்க எதிர்ப்பு தெரிவித்தனர். தொப்புள் கொடி தானாக விழ வேண்டும். அப்போதுதான் அதில் இருந்து நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்து நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்று கண்ணனின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

வீட்டில் பிரசவம் பார்த்து ஏதேனும் விபரீதம் நடந்திருந்தால் பெரியவர்கள்தான் பொறுப்பு என போலீசார் தெரிவித்த போது கண்ணனின் தந்தை தனுஷ்கோடி, தாயார் அழகம்மாள் ஆகியோர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசினார். இதனால் போலீசாருக்கும் கண்ணன் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

டாக்டர்கள் மற்றும் போலீசாரை தரக்குறைவாக பேசியது மற்றும் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற குற்றத்துக்காக கண்ணன், அவரது தந்தை தனுஷ்கோடி தாயார் அழகம்மாள் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தனுஷ்கோடியை போலீசார் கைது செய்தனர்.

மருத்துவர்களின் நீண்ட நேர அறிவுரைக்கு பிறகு மகாலெட்சுமி மற்றும் அவரது குழந்தையை டாக்டர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

திருப்பூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு யூ-டியூப் மூலம் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தேனி அருகே நடந்த இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  #HomeBirth
Tags:    

Similar News