செய்திகள்

புதுக்கோட்டை அருகே வேளாண் அதிகாரி வெட்டிக் கொலை

Published On 2018-07-28 10:44 IST   |   Update On 2018-07-28 10:44:00 IST
புதுக்கோட்டை அருகே காரை மறித்து வேளாண் அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Murdercase #agriculturalofficermurder

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் சிட்கோ பகுதியை சேர்ந்தவர் பூபதி கண்ணன் (வயது 45). இவர் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக வேளாண்மை அலுவலகத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு இவர் வீட்டில் இருந்து காரில் வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இன்று காலை அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் இன்று காலை மாத்தூர் பைபாஸ் சாலையோரம் புதர் பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதாக மாத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு இறந்து கிடந்தது பூபதி கண்ணன் என்பது தெரியவந்தது. அவரது சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் உறவினர்களை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அடையாளம் கண்டனர்.

பூபதி கண்ணனின் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. இதனால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நேற்றிரவு அவர் வெளியே செல்லும் போது காரை மறித்து மர்மநபர்கள் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என தெரிகிறது. அவரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?, எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

வேளாண் அதிகாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Murdercase #agriculturalofficermurder

Tags:    

Similar News