செய்திகள்

இன்று 3-வது ஆண்டு நினைவு தினம்: அப்துல்கலாம் நினைவிடத்தில் மாணவ-மாணவிகள் அஞ்சலி

Published On 2018-07-27 05:12 GMT   |   Update On 2018-07-27 05:12 GMT
ராமேசுவரம் பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் நினைவிடத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam #AbdulKalamMemorial
ராமேசுவரம்:

நாட்டின் 11-வது குடியரசு தலைவராக பணியாற்றி மறைந்த அப்துல்கலாமின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் உள்ள ஷில்லாங்கில் மாணவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்துல்கலாம் மரணமடைந்தார்.

சொந்த ஊரான ராமேசுவரம் பேக்கரும்பில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ளது. இங்கு மத்திய பாதுகாப்பு துறையின் சார்பில் அப்துல் கலாமிற்கு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டப்பட்டு உள்ளது.

3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று அவரது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை பேக்கரும்பு நினைவிடத்துக்கு கலாமின் அண்ணன் முகமது முத்து மீரான் மரைக்காயார், பேரன் ஷேக் சலீம் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து அங்கு ஜமாத் தலைவர் சாகுல் அமீது தலைமையில் துஆ ஓதப்பட்டு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், அ.ம.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

ராமேசுவரத்துக்கு வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் ஏராளமானோர்வந்து செல்கின்றனர்.

அப்துல்கலாம் நினைவு தினமான இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம், ராமேசுவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அப்துல்கலாம் மணி மண்டபத்துக்காக வந்து அஞ்சலி செலுத்தி மணிமண்டபத்தை சுற்றி பார்த்தனர். #AbdulKalam  #AbdulKalamMemorial
Tags:    

Similar News