செய்திகள்

ரகசிய திருமணம் செய்த ஆசிரியைக்கு கொலை மிரட்டல்: எஸ்.பி.யிடம் புகார் மனு

Published On 2018-07-23 17:37 GMT   |   Update On 2018-07-23 17:37 GMT
கணவரை சேர்த்து வைக்ககோரி ரகசிய திருமணம் செய்த ஆசிரியை எஸ்.பி.யிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ஈரோடு:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சகாயபுரத்தை சேர்ந்தவர் ஷீலா (வயது 30). இவர் இன்று காலை ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசனிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நான் காங்கயம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் போது வெள்ள கோவிலை சேர்ந்த கவின்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.

நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரும் கடந்த 10.4.17 அன்று பெருந்துறையில் உள்ள ஒரு கோவிலில் ரகசிய திருமணம் செய்து கொண்டோம்.

பிறகு அவரவர் வீட்டுக்கு சென்று விட்டோம். அவ்வப் போது சந்தித்து ஊட்டி, ஏற்காடு போன்ற ஊர்களுக்கு போய் வந்தோம்.

இந்த நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். ஆனால் கணவரின் வற்புறுத்தலால் கர்ப்பத்தை கலைத்து விட்டேன்.

இந்த நிலையில் எங்களது திருமணம் வி‌ஷயம் தெரிய வர கணவர் வீட்டில் உள்ளவர்கள் என்னை மிரட்டுகிறார்கள். திருமணம் செய்ததாக கூறினால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள்.

எனது காதல் கணவரும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு என்னுடன் உள்ள தொடர்பை துண்டித்து விட்டார்.

இதனால் எனக்கு பாதுகாப்பு கொடுத்து காதல் கணவரை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்.

இவ்வாறு ஆசிரியை ஷீலா அந்த மனுவில் கூறி உள்ளார். 

Tags:    

Similar News