செய்திகள்

சேகர்ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி? - வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை

Published On 2018-07-20 06:33 GMT   |   Update On 2018-07-20 06:33 GMT
சேகர்ரெட்டிக்கு 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டி கிடைத்தது எப்படி என்பது தொடர்பாக வருவாய் புலனாய்வுத்துறை விசாரணையை தொடங்கி உள்ளது. #SekharReddy
சென்னை:

மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

அப்போது ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகள் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள், ரொக்க பணங்கள் மற்றும் பல்வேறு வகை சொத்துக்கள் கைப்பற்றப்பட்டன.

இவற்றுடன் 178 கிலோ தங்க கட்டிகளை கைப்பற்றினார்கள். அவற்றில் 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டிகள் ஆகும்.

இவை எந்த வருமானத்தில் வாங்கப்பட்டது? என்பது குறித்து தொடர்ந்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால், 178 கிலோ தங்கத்தில் 131 கிலோ வெளிநாட்டு தங்க கட்டிகளாக இருப்பதால், அது கடத்தலாக கருதப்பட்டது. இதன் மீது வேறு முறையில் விசாரணை நடந்து வருகிறது.

ஒருவர் வெளிநாட்டு தங்க கட்டிகள் வைத்திருந்தால் அந்த கட்டிகள் எப்படி கிடைத்தன? முறைப்படி அனுமதியுடன் கொண்டு வரப்பட்டதா? அதற்கான சுங்கவரி, அபராதம் போன்றவை செலுத்தப்பட்டதா? என்ற விவரங்களை அரசுக்கு வழங்க வேண்டும்.



ஆனால், இவர் வைத்துள்ள 131 கிலோ வெளிநாட்டு தங்கம் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.

இந்த தங்க கட்டிகளில் சுயூசி என்ற ஆங்கில முத்திரை உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் தயாரிக்கப்படும் தங்கத்தில் தான் இந்த முத்திரைகள் இருக்கும்.

மேலும் ஒவ்வொரு தங்க கட்டியும் ஒரு கிலோ எடை கொண்டதாக இருந்தது. ஒரு கிலோ எடையில் இந்தியாவில் தங்க கட்டிகள் தயாரிப்பது இல்லை.

எனவே, இந்த தங்க கட்டிகள் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கான சுங்க வரிகளோ, அபராதமோ கட்டியதற்கான எந்தவித ஆதாரங்களையும் சேகர் ரெட்டி வருமான வரித்துறையிடம் கொடுக்கவில்லை.

எனவே, கடத்தல் தங்கம் என்ற அடிப்படையில் சேகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க உள்ளனர். சுங்க வரி சட்டம் 123-வது பிரிவின் படி சேகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்கலாம்.

இதுபோன்ற வி‌ஷயங்களை மத்திய வருவாய்த்துறையின் புலனாய்வு பிரிவு விசாரிப்பது வழக்கம்.

இப்போது அந்த துறை விசாரணையை தொடங்கி உள்ளது. வருவாய் புலனாய்வு துறை ஒரு வாரத்துக்கு முன்பு சேகர் ரெட்டிக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது.

அதேபோல் தங்க கட்டிகளை கைப்பற்றிய வருமான வரித்துறையிடமும் புலனாய்வுத்துறை விளக்கத்தை கேட்டு இருக்கிறது.

சுங்க வரி சட்டத்தின்படி ஒருவர் ரூ.1 கோடி மதிப்புக்கு மேலான வெளிநாட்டு பொருட்களை வைத்திருந்தால் அவர் மீது ஜாமீனில் வர முடியாத குற்றத்தின் அடிப்படையில் வழக்கு தொடரலாம். அந்த வகையில் சேகர் ரெட்டி மீதும் இதே வழக்கு தொடரப்படும்.

இதில், குற்றம் உறுதி செய்யப்பட்டால் 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மத்திய அரசின் சொத்தாக கருதப்பட்டு எடுத்து கொள்ளப்படும்.

சேகர் ரெட்டி ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டு வைத்திருந்ததாக சி.பி.ஐ. 2 வழக்கு பதிவு செய்தது. ஆனால், இந்த பணம் எப்படி வந்தது? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சி.பி.ஐ. கூறி விட்டது. இதனால் அந்த வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

இந்த நிலையில் வெளிநாட்டு தங்க கட்டிகள் வைத்திருந்ததற்காக சேகர் ரெட்டி கைது செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது. #SekharReddy
Tags:    

Similar News