செய்திகள்
மதகுகளை திறந்து அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் தண்ணீர் திறந்து வைத்த காட்சி.

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

Published On 2018-07-12 12:54 IST   |   Update On 2018-07-12 12:54:00 IST
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனத்திற்காக இன்று காலையில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.
கோபி:

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் கோபி மற்றும் சத்தியமங்கலம், டி. என்.பாளையம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

விவசாயிகளின் கோரிக்கையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்று தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 12-ந் தேதி (இன்று) தண்ணீர் திறக்கப்படும் என கடந்த 9-ந் தேதி அறிவித்திருந்தார்.

அதன்படி இன்று காலையில் அமைச்சர்கள் கே.ஏ. செங்கோட்டையன், கே.சி. கருப்பணன் ஆகியோர் தண்ணீர் திறந்து விட்டனர்.

பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று கொடிவேரி தடுப்பணையில் இருந்து மதகுகளை அமைச்சர்கள் திறந்து வைத்தனர். மதகை திறந்ததும் தண்ணீர் சீறிப் பாய்ந்தது.

அப்போது தண்ணீர் மீது அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பூக்களை தூவினர். தண்ணீர் திறப்பு நிகழ்ச்சிக்கு ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

தடப்பள்ளி வாய்க்காலுக்கு 450 கன அடி வீதமும், அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 250 கன அடி வீதமும் தண்ணீர் இன்று திறக்கப்பட்டு உள்ளது. படிப்படியாக நீர் திறப்பு உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags:    

Similar News