சீன என்ஜின் பயன்படுத்துவதை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி திடீர் போராட்டம்
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி அருகே ஓலைக் கொட்டகைமேடு என்ற மீனவ கிராமம் உள்ளது. இங்கு 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் பழையாறு பகுதி மீனவர்கள் சீன என்ஜின் பொருத்திய படகுகளை பயன்படுத்தி இப்பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் மீன் வளம் வெகுவாக அப்பகுதியில் குறைந்து விட்டதாக ஓலைக்கொட்டகைமேடு மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்துள்ளனர்.
மேலும் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிவேக சீன என்ஜின் பயன்படுத்தி மீன் பிடிப்பதை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. #Fishermenstruggle