செய்திகள்

மேற்குவங்காளத்தில் படித்த மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-07 08:24 GMT   |   Update On 2018-07-07 08:25 GMT
மேற்குவங்காளத்தில் படித்த மாணவி மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #HighCourt

சென்னை:

மேற்கு வங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த ஐஸ்வர்யா என்ற மாணவி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கோரி விண்ணப்பித்தார்.

இந்நிலையில் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கியுள்ள மருத்துவ படிப்புக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஒதுக்கீட்டு இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வில் தன்னை அனுமதிக்கும்படி உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாணவி ஐஸ்வர்யா தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்கான எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை என மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார்.

இதையடுத்து, அரசு வேலை, தொழில் காரணமாக வெளி மாநிலம் செல்பவர்கள், தங்கள் நிரந்தர முகவரியை இழந்து விடக்கூடாது எனத் தெரிவித்த நீதிபதி, மருத்துவ படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வில் மனுதாரரை அனுமதிக்க உத்தரவிட்டார்.

அதேசமயம், பிற்படுத்தப் பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் கீழ் தன் விண்ணப்பத்தை பரிசீலிக்க வேண்டும் என கோரினால், அதை நிராகரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி வைத்தியநாதன், இந்த மனுவுக்கு வரும் 30-ந் தேதிக்குள் பதிலளிக்க மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தார். #HighCourt

Tags:    

Similar News