செய்திகள்

மத்திய அரசு திட்டம் மூலம் கோவை பெண்ணின் வங்கி கணக்கில் ரூ.45 ஆயிரம் டெபாசிட்

Published On 2018-07-03 04:01 GMT   |   Update On 2018-07-03 04:01 GMT
கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.

பிருந்தா செல்போனுக்கு வந்திருந்த மெசேஜ்.

அப்போது கணக்கில் ரூ. 45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்றார். வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்தனர்.

அப்போது வங்கி அதிகாரி, பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் உங்களுக்கு வந்திருக்கும் என்று கூறினார்.

இது குறித்து பிருந்தா கூறியதாவது, நாங்கள் இதுவரை எந்த விதமான திட்டத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் எனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாரத பிரதமர் கடந்த 2015ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக கூறியிருந்தார். அதற்காக முன்தொகையாக இந்த பணம் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டுள்ளதா? அப்படி என்றால் மீதி பணம் எப்போது வரும்? என்றார்.

ஒருவேளை அதிகாரிகள் தவறாக வேறு பயனாளிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு அனுப்பி விட்டார்களா? என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்று கூறினார்.

பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.



Tags:    

Similar News