செய்திகள்
சுசீந்திரம் பழையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காட்சி.

குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு - பெருஞ்சாணி அணை 24 மணி நேரமும் கண்காணிப்பு

Published On 2018-06-13 06:16 GMT   |   Update On 2018-06-13 06:16 GMT
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வருகிறது.

மார்த்தாண்டம் பகுதியில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன. திடீரென மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

நாகர்கோவிலில் கொட்டித்தீர்த்த மழையினால் மகளிர் கிறிஸ்தவ கல்லூரி சாலை, கோட்டார் சாலை, செம்மாங்குடி ரோடு பகுதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தவாறு சென்றனர்.

களியல், பேச்சிப்பாறை, குலசேகரம், பெருஞ்சாணி, குழித்துறை, தக்கலை, களியக்காவிளை, கொல்லங்கோடு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மயிலாடி, ஆரல்வாய்மொழி, கீரிப்பாறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் விட்டு, விட்டு மழை பெய்தது.

திற்பரப்பு பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாகவும், பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரின் காரணமாகவும் அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மலையோர பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் பெய்து வரும் மழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக் கூடிய நீர்வரத்து கணிசமாக உயர்ந்தது.

ஆனால் பேச்சிப்பாறை அணையில் சீரமைப்பு பணி நடைபெறுவதால் அதிக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அணைக்கு வரக்கூடிய தண்ணீருக்கு ஏற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியதை அடுத்து அணையில் இருந்து பரளியாற்றில் தண்ணீர் திறந்துவிடப்படும். வலியாற்று முகம், அருவிக்கரை, திருவட்டார், மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்பட்டணம் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் இன்று காலை 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 774 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை நிரம்பி வருவதையடுத்து உதவி பொறியாளர் தலைமையில் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு 24 மணிநேரமும் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் விடப்பட்டு உள்ளது. சானல்களிலும், ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாசன குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள 2040 குளங்களில் 39 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 291 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது.

1115 குளங்கள் 75 சதவீதமும், 422 குளங்கள் 50 சதவீதமும், 123 குளங்கள் 25 சதவீதமும் நிரம்பி உள்ளது. பாசன குளங்கள் நிரம்பி வருவதை அடுத்து கன்னிப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி உள்ளனர்.

வழக்கமாக 6,500 ஹெக்டேரில் கன்னிப்பூ சாகுபடி செய்யப்படும். இந்த ஆண்டு இதுவரை 1000 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விவசாயிகள் நாற்று நடவும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.




Tags:    

Similar News