செய்திகள்

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2064 கன அடி தண்ணீர் திறப்பு - புதிய மதகு அமைக்கும் பணி இன்று தொடங்கியது

Published On 2018-06-08 09:48 GMT   |   Update On 2018-06-08 09:48 GMT
கிருஷ்ணகிரி அணையில் புதிய மதகு அமைப்பதற்காக தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அணைக்கு இன்று காலை 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 1053 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. புதிய மதகு அமைக்கும் பணிக்காக இன்று அணையில் இருந்து 2064 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் புதிய மதகு அமைப்பதற்காக, தற்காலிக மதகை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு கலெக்டர் கதிரவன் முன்னிலையில் தொடங்கப்பட்டது. தற்காலிக மதகை அகற்றிய பின், புதிய நிரந்தர மதகு அமைக்கும் பணி தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் ஆற்றை யாரும் கடக்க வேண்டாம் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது அணையின் தரைபாலம் மூழ்கி நீர் செல்வதால் அணைக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணையின் நீர்மட்டம் தற்போது 31.10 அடியாக உள்ளது. இதே போல் கெலவரப்பள்ளி அணையின் மொத்த உயரமான 44.28 அடியில் 41.66 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளது. அணைக்கு 380 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 640 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News