செய்திகள்

பழவந்தாங்கல் அருகே மின்வாரிய அதிகாரி வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-31 12:43 IST   |   Update On 2018-05-31 12:43:00 IST
பழவந்தாங்கல் அடுத்த நங்கநல்லூரில் மின்வாரிய அதிகாரி வீட்டில் 100 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:

பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் நேரு காலனி, 21-வது தெருவில் வசித்து வருபவர் பாலவேலாயுதம். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி.

இவர் வீட்டின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டி வந்தார். இதையடுத்து பாலவேலாயுதம் அதே பகுதி பி.வி. நகரில் உள்ள மகள் வீட்டில் இரவில் குடும்பத்துடன் தங்குவது வழக்கம்.

இந்த நிலையில் இன்று காலை அவர் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது முதல் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் தங்காததை அறிந்து மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

இது தொடர்பாக கட்டுமான தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News