செய்திகள்

விருத்தாசலத்தில் ரூ.3 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்- கைதான சென்னை வாலிபர்கள் சிறையில் அடைப்பு

Published On 2018-05-13 20:31 IST   |   Update On 2018-05-13 20:31:00 IST
விருத்தாசலத்தில் ரூ.3 லட்சம் ஹவாலா பணத்தை கடத்தி வந்த போது போலீசாரிடம் சிக்கிய சென்னை வாலிபர்கள், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே மங்கலம்பேட்டை சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார் விஜயமாநகரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது விருத்தாசலத்தில் இருந்து மங்கலம் பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை போலீசார் நிறுத்தி வாகனத்துக்குரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அவர்கள் இல்லை என கூறி முன்னுக்குப்பின் முரணாக பேசினர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் கொண்டு வந்த பையை சோதனை செய்த போது அதில் கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் பணம் இருந்தது. அந்த பணம் குறித்து விசாரித்தபோது அந்த வாலிபர்கள் 2 பேரும் சப்-இன்ஸ்பெக்டரை தகாதவார்த்தைகளால் திட்டினர்.

உடனே போலீசார் அவர்கள் 2 பேரையும் மங்கலம் பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். விருத்தாசலம் உதவி போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையிலான போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அந்த வாலிபர்கள் சென்னை துறைமுகம் ஆதன்தெருவைச் சேர்ந்த லுக்மோன்அகமது (வயது 24), என்பதும், மற்றொருவர் சென்னை மன்னடியைச் சேர்ந்த ஷேக் அப்துல்காதர் (28) என்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த 3 லட்சம் பணத்துக்கு அவர்களிடம் எந்தவித கணக்கும் இல்லை, உரிய ஆவணங்களும் இல்லை என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் ஹவாலா பணம் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களா? 3 லட்சம் பணத்தை யாருக்கு கொடுக்க கொண்டுச்சென்றனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

பின்னர் கைதான 2 பேரையும் விருத்தாசலம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவர்களை காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதன் பேரில் லுக்மோன் அகமது, ஷேக் அப்துல் காதர் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News