செய்திகள்

காங்கயத்தில் டி.வி.யை தலையில் போட்டு தாயை கொன்ற மகன்

Published On 2018-05-02 10:28 GMT   |   Update On 2018-05-02 10:28 GMT
காங்கயத்தில் இன்று அதிகாலை தாயின் தலையில் டி.வி.யை போட்டு மகனே கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளகோவில்:

திருப்பூர் மாவட்டம் காங்கயம் கரூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜாதேவி (வயது 75). இவரது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் சிவசண்முகம் (47).

இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்தார். கடந்த 1 வாரமாக மருந்து, மாத்திரை எதுவும் சாப்பிடாமல் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதிர்ச்சியடைந்த தாய் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தார். ஆனால் மகனை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று சிவசண்முகம் வீட்டுக்கு திரும்பினார்.

மகிழ்ச்சியடைந்த தாய் மகனுக்கு ஆறுதல் கூறி சாப்பிட வைத்து மருந்து, மாத்திரை கொடுத்தார். பின்னர் இருவரும் தூங்கினர்.

இன்று அதிகாலை திடீரென எழுந்த சிவசண்முகம் ஆவேசமாக காணப்பட்டார். தூங்கிக்கொண்டிருந்த தாய் மீது அருகில் இருந்த டி.வி.யை எடுத்து தலையில் ஓங்கி போட்டார். இதில் பலத்த காயம் அடைந்த சரோஜாதேவி படுக்கையிலேயே ரத்தவெள்ளத்தில் இறந்தார்.

காலை வெகுநேரமாகியும் சரோஜாதேவியின் நடமாட்டம் இல்லாததை அறிந்த உறவினர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவர் டி.வி.யால் அடித்துக்கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதிர்ச்சியடைந்த உறவினர் மற்றும் பொதுமக்கள் இது குறித்து காங்கயம் போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குளியல் அறையில் பதுங்கியிருந்த சிவசண்முகத்தை பிடித்தனர். பின்னர் சரோஜாதேவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
Tags:    

Similar News