செய்திகள்

திருப்புவனம் அருகே வரதட்சணை தகராறில் இளம்பெண் எரித்துக்கொலை

Published On 2018-04-30 16:45 IST   |   Update On 2018-04-30 16:45:00 IST
திருப்புவனம் அருகே வரதட்சணை தகராறில் இளம்பெண் எரித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தலைச் சேர்ந்தவர் பத்மநாபன். இவர், அதே பகுதியைச் சேர்ந்த முத்துலட்சுமி (30) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

கடந்த சில மாதங்களாக முத்துலட்சுமியிடம் கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு பத்மநாபன் தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது.

இந்த நிலையில் சம்பவத்தன்றும் 2 பேருக்கும் தகராறு ஏற்பட ஆத்திரம் அடைந்த பத்மநாபன் மனிதாபமானமின்றி மனைவி மீது மண்எண்ணை ஊற்றி தீ வைத்தார். உடல் கருகிய அவர் வலியால் அலறித்துடித்தார்.

உடனே அக்கம், பக்கத்தினர் முத்துலட்சுமியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 60 சதவீத தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட்டு முத்துலட்சுமியிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி முத்துலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

பெண்ணை கொலை செய்ததாக பத்மநாபன் மீது திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Similar News