செய்திகள்
கைதான கண்மணிராஜா.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு 3 மாத குழந்தை கொன்ற தந்தை

Published On 2018-04-21 09:57 IST   |   Update On 2018-04-21 09:57:00 IST
விருத்தாசலம் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு பிறந்து 3 மாதமே ஆன குழந்தையை தந்தை கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள சிறுவரப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்மணி என்கிற கண்மணிராஜா(வயது 32). தொழிலாளி. இவருக்கும், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள செம்மங்குடி கிராமத்தை சேர்ந்த ஜமுனாராணிக்கும்(26) கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

இவர்களுக்கு ஹகின்(5) என்ற மகனும், சஞ்சனா(2) என்ற மகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமான ஜமுனாராணிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜமுனாராணி கையில் வைத்திருந்த 3 மாத பெண் குழந்தையை கண்மணிராஜா திடீரென பறித்து தரையில் ஓங்கி அடித்தார்.

இதில் அந்த குழந்தை இறந்தது. பின்னர் அங்குள்ள குளத்தின் கரையோரத்தில் உள்ள வாழைமரத்தின் அடியில் 2 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி அந்த குழந்தையை கண்மணிராஜா புதைத்தார்.

இந்த சம்பவம் குறித்து ஜமுனாராணி கம்மாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து கண்மணிராஜாவை போலீசார் கைது செய்தனர். போலீசார் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

பெண்குழந்தையை கொன்றது ஏன் என்பது குறித்து போலீசில் கண்மணி ராஜா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 7-ம் வகுப்பு வரை படித்துள்ளேன். பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு கூலிவேலைக்கு சென்றேன். எனக்கும், ஜமுனாராணிக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணமானதில் இருந்து ஜமுனாராணி அவரது தாய் வீட்டிற்கு சென்றால் வெகுநாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவார். இதனால் எனக்கு அவரது நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது.


இதற்கிடையில் 3-வதாக கர்ப்பமான எனது மனைவிக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு கும்பகோணத்தில் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை சிகப்பாக இருந்ததாலும், என்னை போன்றோ, எனது மனைவியை போன்றோ இல்லாததாலும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அந்த குழந்தை எனக்கு பிறக்கவில்லை என்றும், அந்த குழந்தையை உன் பெற்றோர் வீட்டிலேயே விட்டுவிட்டு வருமாறும் ஜமுனா ராணியிடம் கூறினேன். ஆனால் அதையும் மீறி அந்த குழந்தையை எனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அந்த குழந்தையை பார்க்கும்போதெல்லாம் அதிகளவு கோபம் வரும். குழந்தையை தீர்த்து கட்ட திட்டம் தீட்டினேன். அதன்படி 19-ந் தேதி கூலி வேலைக்கு சென்று விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு வந்தேன். உடனே எனக்கு சாப்பாடு போட்டு தருமாறு எனது மனைவியிடம் கூறினேன்.

அதற்கு என் மனைவி, குழந்தையை வைத்திருப்பதாகவும், சாப்பாட்டை நீயே போட்டு சாப்பிடு என்றும் கூறினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஜமுனாராணியை அடித்து, கழுத்தை நெரித்தேன். அந்த சமயத்தில் அந்த குழந்தை அழுதது. உடனே குழந்தையின் 2 கால்களையும் பிடித்து தூக்கி, தலைகீழாக தரையில் ஓங்கி அடித்தேன்.

உடனே அந்த குழந்தை இறந்து விட்டது. இதை பார்த்து எனது மனைவி கதறி அழுதார். உடனே நான் அவரிடம் கூச்சலிட்டால் உன்னையும், மற்ற 2 குழந்தைகளையும் கொன்று விடுவேன் என்று கூறினேன். பின்னர் அந்த குழந்தையை வீட்டின் பின்புறத்தில் உள்ள குளத்தின் கரையில் பள்ளம் தோண்டி புதைத்தேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News