செய்திகள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது தலையில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்ற போது எடுத்த படம்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி

Published On 2018-04-16 15:45 IST   |   Update On 2018-04-16 15:45:00 IST
கடலூர் கலெக்டர் அலுவலகத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர்:

கடலூர் மாவட்டம் தியாகவள்ளியை அடுத்த நொச்சிக்காடு பகுதியை சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 28). விவசாயி. இவரது மனைவி செந்தமிழ்செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

தங்கபாண்டியனின் தாய்-தந்தை மற்றும் சகோதரர் மருதுபாண்டி அவரது குடும்பத்தினர் உள்பட 16 பேருடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று குறைகேட்பு கூட்டத்துக்கு மனு கொடுக்க வந்தனர்.

அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த தண்ணீர் கேனை வெளியே எடுத்தனர். அதில் இருந்த பெட்ரோலை தங்கப்பாண்டியன் உள்பட 16 பேரும் தங்களது உடலில் திடீரென்று ஊற்றி கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் தீக்குளிக்க முயன்றனர்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக ஓடிச்சென்று அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர்.

பின்னர் அவர்கள் 16 பேர் மீதும் தண்ணீரை ஊற்றினர். அவர்களிடம் இருந்த கேனை கைப்பற்றினர். இது குறித்து போலீசார் தங்கப்பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தங்கப்பாண்டியன் வைத்திருந்த மனுவை போலீசார் கைப்பற்றினர்.

நான் எனது தாயுடன் நொச்சிக்காட்டில் உள்ள புறம்போக்கு நிலத்தில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் எங்களைப் பார்த்து இந்த வழியாக நீங்கள் நடந்து செல்ல அனுமதி இல்லை. வேறு வழியாக செல்லுங்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் என்னையும், எனது தாயையும் திட்டி தாக்கினார். இதேபோல் இதற்கு முன்பு பலமுறை எங்கள் மீது அந்த வாலிபர் எங்களுடன் இதே காரணத்துக்காக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். நாங்கள் எந்த வழியில் நடந்து செல்வது என்று தெரியவில்லை. எங்களுக்கு வழிப்பாதை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் எங்களை தாக்கிய அந்த வாலிபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

தீக்குளிக்க முயன்றவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தீக்குளித்து இறந்த சம்பவம் நடந்தது. அதேபோல் தற்போது கடலூர் கலெக்டர் அலுவலகத்திலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News