செய்திகள்

கடைக்கு வெளியே கேமரா கட்டாயம்: நகை கடை அதிபர்களுக்கு போலீசார் அதிரடி உத்தரவு

Published On 2018-03-28 05:58 GMT   |   Update On 2018-03-28 06:12 GMT
நகை கடைகளுக்கு உள்ளேயும் மற்றும் வெளியேயும் கேமராக்களை கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று போலீசார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சென்னை:

சென்னையில் நகை கடைகள், வங்கிகளில் தொடர் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு தொடர்பாக அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இதற்கான நடவடிக்கைகளை கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராமன் ஆகியோர் முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னையில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்களை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் நகை கடை, மற்றும் அடகு கடை அதிபர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த அடகு கடை உரிமையாளர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கடைகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கேமராக்களை கட்டாயம் பொறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பழைய நகைகளை யாராவது விற்பனை செய்ய வந்தால் அவர்கள் பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சந்தேக நபர்கள் குறித்தும் தகவல் கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

கடையில் வேலை செய்பவர்கள் பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும். தரமான பூட்டுகளையே கடைகளில் பயன் படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே நொளம்பூர் பகுதியில் பொது இடங்களில் 200 இன்டர்நெட் கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களை கண்காணிப்பு அறையில் இருந்தே போலீசார் கண்காணித்து வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News