செய்திகள்
கொள்ளை நடந்த வீடு.

பண்ருட்டி அருகே வியாபாரி வீட்டில் ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை

Published On 2018-03-07 15:33 IST   |   Update On 2018-03-07 15:33:00 IST
பண்ருட்டி அருகே வியாபாரி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பண்ருட்டி:

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த திருவதிகை தெற்கு பட்டரை பெரியார் நகரை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 35). இவர் பண்ருட்டியில் பெயிண்ட்கடை வைத்துள்ளார்.

வடலூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பாலமுருகன் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் நேற்று காலை புறப்பட்டார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நள்ளிரவில் பாலமுருகன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

பாலமுருகன் இன்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிகிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போய் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.

இதுகுறித்து பாலமுருகன் பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் லூயிஸ்ராஜ், மகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளைநடந்த வீட்டை மோப்பம் பிடித்துவிட்டு சிறிதுதூரம் ஓடி சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் நிபுனர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் வழக்குபதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

இதேபகுதியில் உள்ள சரநாராயணபெருமாள் கோவில் தெருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாலாஜி என்பவரது மளிகைகடையின் பூட்டை உடைத்து அங்கு இருந்த ரூ.40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். தொடர்ந்து இந்த பகுதியில் கொள்ளை சம்பவம் நடந்து வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். #Tamilnews

Similar News