பெருந்துறை அருகே இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்ம மரணம்
பெருந்துறை:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள தொட்டியபாளையம் சீலம் பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). அதே பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி என்ற மாரநாயக்கர் (49).
உறவினர்களான இருவரும் பெருந்துறை சிலேட்டர் நகரில் இரும்பு அடிக்கும் கொல்லு பட்டறை வைத்து நடத்தி வந்தார்கள்.
சில தினங்களுக்கு முன் பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் சூரியம் பாளையம் பகுதியில் கணவர் சுப்பிரமணியம் (50) என்பவர் கொலை செய்யப்பட்டும் அவரது மனைவி மைதிலி (32) விஷம் குடித்த நிலையில் பிணமாக கிடந்தனர்.
அதே பாணியில் பெருந்துறை சிலேட்டர் நகர் பகுதியில் இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
நேற்று இரவு பட்டறை முன் என்ன நடந்தது என்று தெரியவில்லை. அறையின் முன் வரண்டாவில் மாரிசாமி தூக்கில் பிணமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இனஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அங்கு மாரிசாமி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். பக்கத்து அறைக்குள் சென்ற போலீசாருக்கு அங்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அறையில் பழனிசாமி கத்தியால் குத்தப்பட்டு பிணமாக கிடந்தார். நண்பர்கள் இருவரில் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்க இன்னொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டதும் இந்த சம்பவம் எப்படி நடந்தது? இருவருக்குள் தகராறு ஏற்பட்டு ஒருவரை கொலை செய்து விட்டு இன்னொருவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரோ ஒருவரை கொன்று விட்டு மற்றொருவரை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டு சென்று விட்டார்களா? என்றும் பல கோணங்களில் போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இரும்பு பட்டறை அதிபர்கள் 2 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.
இறந்த பழனிசாமிக்கு மாராத்தாள் (45) என்ற மனைவியும், கவிதா (26), ஹேமா (23) என்ற 2 மகள்களும் நவீன் (20) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இதே போல் மாரிசாமிக்கு மகாலட்சுமி (45) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (25), நாகராஜ் (23) என்ற 2 மகன்களும், சித்ராதேவி (20) என்ற ஒரு மகளும் உள்ளனர். #tamilnews