செய்திகள்

பெண்ணாடம் அருகே கழுத்தை இறுக்கி விவசாயி கொலை

Published On 2018-02-24 13:17 GMT   |   Update On 2018-02-24 13:17 GMT
பெண்ணாடம் அருகே வயல்வெளியில் விவசாயி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெண்ணாடம்:

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள மாளிகைகோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 35) விவசாயி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். நேற்று இரவு முருகன் தனது உறவினர் ஒருவருடன் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பிவர வில்லை. அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் முருகனை தேடினர். அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்தனர். ஆனால் அவர் பற்றிய தகவல் தெரியவில்லை. இந்த நிலையில் மாளிகைகோட்டத்தில் உள்ள டாஸ் மாக்கடை அருகே வயல்வெளியில் முருகன் இன்றுகாலை பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் முருகனின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர்.

அப்போது முருகன் அணிந்திருந்த வேட்டியால் அவரது கழுத்து இறுக்கப்பட்டிருப்பதையும், கழுத்தில் ரத்தக்காயம் இருந்ததையும் போலீசார் கண்டனர். முருகனை யாரோ கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது.

முருகனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குபதிவு செய்தனர். முருகனை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் முருகனுடன் சேர்ந்து மதுகுடிக்க சென்ற அவரது உறவினரையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். அவருக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News